April 22, 2022
தண்டோரா குழு
கடந்த 2011ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது குஜராத் கவர்னராக கமலா பெனிவால் இருந்தார். அப்பொழுது மாநில உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாக கூறி அவரை திரும்ப பெற வேண்டுமென மோடி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் அந்தக் கடிதத்தை நினைவு படுத்தி அதனை மோடிக்கே அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் பிரதமர் அன்று எழுதிய கடிதத்தின் நகல்களை அவருக்கே தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈசுவரன் தலைமையில் இந்த இயக்கத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கடித நகல்களை தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த ஈசுவரன், 2011ம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்த பொழுது குஜராத் மாநில கவர்னர் கமலா பெனிவால் மாநில உரிமைகளில் தலையிடுவதாக கூறி அவரை திரும்ப பெற வலியுறுத்தி அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி குஜராத் மாநிலத்தை மாபெரும் ஊர்வலத்தை கொண்டார் என்றும், நரேந்திர மோடி தற்பொழுது பிரதமரான பிறகு தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துள்ளதாகவும், ராஜ்பவன் மூலம் கொள்ளை புற ஆட்சியை நடத்த முயற்சித்து வருவதாகவும் இது ஜனநாயக முறைக்கு எதிரானது என்றும் எனவே அன்றைக்கு அவர் எழுதிய கடிதத்தை அவரே நினைவு கூறும் வகையில் அந்த கடிதத்தை அவருக்கே அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.