December 28, 2016
தண்டோரா குழு
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் அருகில் சியல்டா-ஆஜ்மீர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 15 பெட்டிகள் புதன்கிழமை (டிசம்பர் 28) அதிகாலையில் தடம்புரண்டன. அதில் 5௦ பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
அந்த ரயில் செவ்வாய்க் கிழமை இரவு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கிளம்பி உத்தரப் பிரதேசம் மாநிலம் வழியாக கோல்கத்தா நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அந்த ரயில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் இருந்து 7௦ கிலோ மீட்டர் தொலைவி உள்ள ஒரு பாலத்தைக் கடக்க முயன்றபோது, தண்டவாளத்தை விட்டு விலகியதால் ரயிலின் 15 பெட்டிகள் தடம்புரண்டன. அவற்றில் இரண்டு பெட்டிகள் பாலத்தில் இருந்து கவிழ்ந்து வறண்ட நதியில் விழுந்தது. புதன்கிழமை அதிகாலை 5.2௦ மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் உடனே சம்பவ இடத்திற்குச் சென்றனர். கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டியில் சிக்கியிருந்த மக்களை மீட்டனர். இவ்விபத்தில் காயமடைந்த 5௦ பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், “நாங்கள் பயணம் செய்த ரயில் பெட்டி திடீரென்று ஒரு பக்கம் சாய்த்தது. ஜன்னல் வழியாக தப்பித்த நான் சில ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடந்ததைப் பார்த்தேன்” என்றார்.
இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பதிவில், “காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி உடனே வழங்கப்பட்டது. உதவி மற்றும் நிவாரண உதவிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்திற்கான காரணத்தை அறிய தீவிர புலனாய்வு நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
நவம்பர் 2௦ம் தேதி இந்தூர் – பட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டத்தில் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த 15௦ பயணிகள் உயிரிழந்தனர். 2௦௦ பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.