July 9, 2022
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் நந்தா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சி.சி.டி.வி கேமரா மையம் போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ளது நந்தா நகர். இப்பகுதி மக்கள் ஒத்துழைப்போடு சிங்காநல்லூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி கோவையை சேர்ந்த “ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப” நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுடன் இங்கு 32 கண்கானிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இதன் ஒருங்கினைந்த மையத்தின் துவக்கவிழா இன்று காலை இப்பகுதியல் உள்ள கே.பி.ஆர். லே-அவுட் வாணியர் முன்னேற்ற சங்க அரங்கில் நடைபெற்றது.
கோவை மாநரக காவல் துறை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை துவக்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருபுறம் நன்மையும் உள்ளது ஒரு பக்கம் தீமையும் உள்ளது. இந்த பகுதியில் உள்ள குற்றங்களை தடுக்க பொது மக்கள் சிசிடிவி மையத்தினை திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது. குற்றங்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்பொழுது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.செல்போன்,கம்ப்யூட்டர் மூலம் குற்றங்கள் நடைபெறுகின்றன. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் பணங்களை அனுப்புவது போன்ற விஷயங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் கோவை ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி 32 கேமராக்களை காவல் துறை ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இப்பகுதி மக்கள் தங்களது வீடு, கடைகளை முழுமையாக கண்காணிக்க மிகவும் உதவியாக இருக்கும்.அதிகரித்து வரும் குற்றங்களை பெரும்பாலும் தடுக்க முடியாது என்றாலும், அவற்றை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. என்றார்.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை கோவை சரகம் சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையாளர் எம்.ஜி. அருண்குமார் வரவேற்றார். கோவை மாநகரம் தெற்கு, காவல் துணை ஆணையாளர் என். சிலம்பரசன் நன்றி கூறினார்.