January 4, 2017
தண்டோரா குழு
கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய சம்பவம் அம்மாநிலம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை (ஜனவரி 3) கூறியதாவது:
கர்நாடக பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே. அவரது தாயார் உடல்நலக் குறைவால் சிரசி என்னும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அங்கு வந்திருந்த ஹெக்டே, தனது தாயாரை மருத்துவமனை ஊழியர்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு மருத்துவமனை ஊழியர்களையும், ஒரு செவிலியரையும் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் அம்மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், இது குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனினும், சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.