December 13, 2022
தண்டோரா குழு
கோவை ரயில் நிலையம் பின் பகுதியில் உள்ள குட்செட் சாலையில் நேற்று உக்கடம் போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1 டன் அளவில் இருந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த அபுதாஹீர் (45), காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஐசக் (35), ராம்பிரபு (40) என்பது தெரியவந்தது. மேலும் ரயிலில் கொண்டு வரப்பட்ட இந்த புகையிலைபொருட்களை விற்பனைக்காக அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த புகையிலை பொருட்களை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர், யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.