January 14, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி இரவு கோவில்பாளையம் பகுதிகளிலும், 10ம் தேதி இரவு கருமத்தம்பட்டி பகுதியிலும் வடமாநிலத்தவர் தங்கியிருந்த பகுதிகளில் சில கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வடமாநிலத்தவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் சில பொருட்களை திருடி சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆரோக்யராஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தும், பழங்குற்றவாளிகள் மற்றும் செயல்முறை குற்றவாளிகளின் பட்டியல் சோதனை செய்யப்பட்டது.
இதில் கூட்டுக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் வஞ்சிநாதன் (19), மணிராஜ் என்பவரது மகன் விஜய் ராஜ்(22), தனபால் என்பவரது மகன் ரோகித் (20), பொன்னையா எனபவரது மகன் திரேஷன் (எ) சூர்யா (23), சின்ராஜ் மகன் சீனு (எ) திருமலை (23), மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (20) மற்றும் 3 இளஞ்சிறார்கள் உட்பட 9 நபர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கும், இளஞ்சிரார்களை கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர்.