April 14, 2023
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலைமணி(45). இவர் அதே பகுதியில் நிதி நிறுவனங்கள் நடத்தி வந்தார். மேலும் அந்நிறுவனங்களுக்கு இயக்குனராகவும் இருந்து வந்தார். இதில் கலைமணியின் தந்தை பழனிசாமி கவுண்டர் (65),மாமா சிவசுப்பிரமணி (58), நண்பர் சாமிநாதன் (48) ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏராளமான மக்கள் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்யத மக்களுக்கு அசல் மற்றும் வட்டி பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் 24 பேரிடம் ரூ. 2 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கலைமணி உள்பட 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட கலைமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 51 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமி கவுண்டர், சாமிநாதன், சிவசுப்பிரமணி ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என கூறி 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் அஜராகி வாதாடினார்.