May 15, 2023
தண்டோரா குழு
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது. அதில் 4 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த பைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.அப்போது அதில் 2 பேர் பேண்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து 3.03 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சம் ஆகும்.விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் (வயது 27), சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.