January 20, 2017
தண்டோரா குழு
சிரியாவில் அலேப்போ மாகாணத்தின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அல்-காய்தாவுடன் இணைந்த ஃபெடே அல்-ஷாம் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 40 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான படையும் சிரியா அரசும், அதன் கூட்டாளியான ரஷியாவும் இணைந்து பயங்கரவாதிகளின் இலக்குகளைத் தாக்கி வருகின்றனர்.
எனினும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் யார் நடத்தியது என்பது உறுதி செய்யப்படவில்லை என்று மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
ரஷியாவும் துருக்கியும் இணைந்து கடந்த டிசம்பர் 30ம் தேதி ஏற்பாடு செய்த போர்நிறுத்தத்திற்கு இந்த பயங்கரவாத அமைப்பு இணங்கவில்லை. அதையடுத்து, விமானத் தாக்குதல்களுக்கு ஆளாகி, சுமார் நூறு தீவிரவாதிகளை இழந்தது இந்த அமைப்பு.