January 22, 2017
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கு போட்டிகளுக்கு நீதிமன்ற தடை வராதபடி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து போராட்டக்களத்தில் உள்ளவர்களுக்கு முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெளிவுடுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர்மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமைவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“ மக்களின் நம்பிக்கையைப் பெறாத நிலையில், ஒரு சட்டம் எவ்வளவு தான் பாதுகாப்பானதாக இருந்தாலும் தற்காலிகமாக உரிமைகளை மீட்பதாக இருந்தாலும் அது நடைமுறைப் பயனைத் தராது.
எனவே, தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள்“அவசர சட்டமே நிரந்தர சட்டம்” என்று சொல்வதை தவிர்த்து போராட்டக்காரர்களின் கோபம் தணியும் வகையில், நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணும் வகையில் மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது, அதற்கு மத்திய அரசின் சட்ட ஒத்துழைப்பை எந்த அளவு பெற்றிருக்கிறது, இனி எக்காலத்திலும் நீதிமன்றத் தடை வராதபடி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசி தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இந்த அவசர சட்டம் உதவும் என்பதையும், அடுத்த ஆண்டு முதல் நிரந்தர சட்டம் வாயிலாக, தடையின்றிப் போட்டிகள் நடைபெறும் என்பதையும் விளக்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஆவன செய்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறவும், நிரந்தர அமைதி நிலவவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.