February 24, 2024
தண்டோரா குழு
கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 24வது ஆண்டு விழா இன்று காலை ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள்,நன்கொடையாளர்கள்,
பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
தொடர்ந்து குருஜி சிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 12 மாவட்டங்களில் சிறப்பாக இயங்கி வருகிறது.உலகம் முழுவதும் இலவச சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆசிரமம் மூலம் ஆதரவற்ற ஏழைகள், தாய் தந்தையற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட பெண்கள், பெற்றோர்கள், முதியோர்கள், மனநலம் குன்றியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக அனைத்து சேவைகளும் செய்து வருகின்றோம்.
உலகெங்கும் உள்ள ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை உறைவிடம் கல்வி மருத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றை இலவசமாக உதவ திட்டமிட்டுள்ளோம். நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்கும் தங்களது ஆதரவுகளை தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்கொடையாளர்கள் தினவிழா காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. அனைவரும் விழாவில் பங்கேற்க வருமாறு குருஜி அழைப்பு விடுத்தார்.
இன்றைய நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.