December 10, 2024
தண்டோரா குழு
கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (சிசிஎஃப்) கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் ஈவென்ட்ஸுடன் இணைந்து கோயம்புத்தூர் மாரத்தானின் 12 வது பதிப்பில் 21,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இது 4 பிரிவுகளைக் கொண்ட மாரத்தான் போட்டியாக நடத்தப்படுகிறது.முறையே 21.1 கிமீ ஓட்டம் (அரை மாரத்தான்); 10 கிமீ ஓட்டம்; 5 கிமீ ஓட்டம் மற்றும் கார்ப்ரேட் நிறுவங்களுக்கான ரிலே ஆகும்.
புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நிதி திரட்டுவதற்க்காக இந்த மாரத்தான் போட்டியானது நடத்தப்படுகிறது.இது தமிழ்நாடு தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாரத்தான் மற்றும் டி-ஷர்ட் & பதக்கம் வெளியீட்டு விழா ப்ரூக்ஃபீல்ட்ஸில் மாலில் நடைபெற்றது.கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் , டாக்டர்.பாலாஜி,நிர்வாக அறங்காவலர், கோயம்பத்தூர் கேன்சர் பவுண்டேசன், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ், வாக்கரூ இயக்குனர் ராஜேஷ் குரியன் மற்றும் கோயம்புத்தூர் மாரத்தான் 2024 பந்தய இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி ஆகியோர் டி-சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினர்.
கூட்டத்தை வரவேற்று டாக்டர்.பாலாஜி பேசுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மாரத்தான் போட்டியை தொடங்கும் போது, இந்த மாரத்தான் போட்டி இன்று இருக்கும் அளவுக்கு வளரும் என்று நாங்கள் நினைத்ததில்லை. அனைத்து ஸ்பான்சர்கள், பங்கேற்பாளர்கள், கோயம்புத்தூர் மாவட்ட மற்றும் நகர நிர்வாகம் மற்றும் நகர காவல்துறைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த மாரத்தான் போட்டியின் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவாக 12 ஆண்டுகளில் ரூ.5 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில்,கடந்த ஆண்டு 18,600+ பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றதாகவும் , இந்த ஆண்டு 19 மாநிலங்களில் இருந்து 21,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் இது 13% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்த மொத்த நபர்களில் 4,500 பேர் பெண்கள் ஆவர்.
இந்த முறை, கோயம்புத்தூர் மாரத்தான் அமைப்பாளர்கள் வாட்ஸ் அப் மூலம் மாரத்தான் பதிவு செய்ய ஒரு தளமாகப் பயன்படுத்தினர். இது உலகிலேயே முதல் முறை ஆகும். மேலும் 20% பதிவுகள் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு, பதிவு செய்தவர்களில் 78% பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். மாரத்தானில் பங்கேற்ற மிக வயதான நபர் 92 வயது முதியவர் (5 கிமீ); 84 வயது முதியவர் (10 கிமீ); 79 வயது முதியவர் (அரை மாரத்தான்) போட்டியில் பங்கேற்க பதிவுசெய்துள்ளனர்.
அதே போல்,79 வயதுடைய பெண் பங்கேற்பது அதிக வயதான பெண்மணியாக இருப்பார், மற்ற இரு 68 வயது மற்றும் 65 வயதுடைய பெண்களும் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ளனர்.மொத்த ரொக்கப் பரிசு ரூ. 4.25 லட்சம் ஆகும்.
மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேசுகையில்,
மிகுந்த ஆர்வத்துடனும்,நுணுக்கமான திட்டமிடலுடனும் மிகவும் தொழில்முறை முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக ஏற்பாட்டுக் குழுவினரைப் பாராட்டினார்.இந்த நிகழ்வு தொடர்ந்து வளர்ச்சியடைந்து,வரும் ஆண்டுகளில் கோவை மாரத்தான் உலக மாரத்தான் வரைபடத்தில் முக்கிய இடம்பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.