January 27, 2017
தண்டோரா குழு
ரஷிய சுற்றுலாப் பயணி ஒருவர் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் மாடியிலிருந்து திடீரென்று குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் வியாழன் இரவு நடந்திருக்கிறது.
இது குறித்து கேரள மாநில காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
“ரஷ்யாவை சேர்ந்த டேனி (3௦) என்பவர் கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பார்த்துவிட்டு மும்பைக்குச் செல்ல திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு, கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகிய நடைமுறை பரிசோதனைகளை முடித்துவிட்டு விமான நிலையத்தின் மேல் தளத்திற்குச் சென்றுள்ளார்.
மேல்தளத்துக்குச் சென்ற அவர் திடீரென மேல் மாடியில் இருந்து கீழே குதித்திருக்கிறார். அதைக் கண்ட அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, விமான நிலைய அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அந்த நபரை ஏற்றி, மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேல் தளத்திலிருந்து கீழே குதித்த அந்த நபர் யார், எதற்காக இந்தப் பரிதாபமான முடிவை எடுத்தார் என்பன குறித்து அறிய தீவிர புலன்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய தூதரத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்”
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.