April 8, 2025
தண்டோரா குழு
இந்திய ஜவுளி மற்றும் ஜவுளி பொறியியல் துறையை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதிலும், உலகம் முழுவதிலுமிருந்து தொழில்நுட்ப சிறப்பை இந்தியா மற்றும் ஆசிய சந்தைகளுக்கு கொண்டு வருவதிலும் முக்கிய தூணாக விளங்கும் இந்தியா ஐடிஎம்இ அமைப்பு 3வது இந்திய ஐடிஎம்இ விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளுக்கு உத்வேகம் அளிப்பதே இந்த விருதின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டு விருதுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை தொழில்நுட்ப சக்தியாக மாற்ற தொழில்துறையை ஊக்குவிக்கவும், மேம்படுத்துவதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இந்த விருதானது ஜவுளிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 4 முக்கிய பிரிவுகள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு 2 பிரிவுகள், பெண்களைக் கௌரவிக்கும் விதமாக 2 பிரிவுகள் என 8 பிரிவுகளின் கீழும் மற்றும் ஜவுளிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் விதமாக கவுரவ சிறப்பு விருதும் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் பின்வரும் பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.ஜவுளி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வகையில், அதிநவீன ஜவுளி பொறியியல் தொழில்நுட்பம், ஜவுளி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன் (அதாவது ஜின்னிங் தொழில்நுட்பம், நூற்பு தொழில்நுட்பம், நெசவு தொழில்நுட்பம், பதப்படுத்துதல் மற்றும் முடித்தல் தொழில்நுட்பம், ஆடை தொழில்நுட்பம், துணைக்கருவிகள்), நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனம், சிறப்பான சமூக மேம்பாட்டு பணி ஆற்றிய நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளின் கீழும், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை சர்வதேச மற்றும் உள்நாட்டில் இந்தியா ஒரு ஜவுளி தொழில்நுட்ப சக்தி மையம் என்பது குறித்த ஆய்வு கட்டுரை, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறந்த டிசைன் ஆகிய பிரிவுகளிலும், பெண்களுக்கான பிரிவில் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் ஜவுளித் தொழில் அல்லது ஜவுளி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண்கள், ஜவுளி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன் (தனிப்பட்ட பெண் தலைமைத்துவம்) ஆகியவற்றின் கீழும், தொழில்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கு இணையதளம் https://awards.india-itme.com/ மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் ஒவ்வொரு விருது வகை, தகுதி அளவுகோல்கள் மற்றும் பொதுவான வழிமுறைகள் பற்றிய விவரங்களும் உள்ளன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பிக்க கடைசி தேதி வரும் ஜூலை 31-ந்தேதி ஆகும்.
வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்கப் பரிசு, விருது, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தியா ஐடிஎம்இ விருதுகளை வெல்வது பொறியியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதோடு,வெற்றி பெறும் நிறுவனங்களின் நற்பெயரை இந்த விருதானது மேலும் அதிகரிக்கச் செய்யும். இந்த விருதுகள் தேசிய எல்லைகளைக் கடந்து புதுமைகளை ஊக்குவிக்கவும், தொழில்துறையின் வளர்ச்சியைக் கொண்டாடவும்,புதிய எல்லைகளை அடையவும் ஊக்கமளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.