January 28, 2017
தண்டோரா குழு
ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த ஆறே நாளில் ஒரு பெண் குழந்தை திடீரென்று இறந்துவிட்டது. ஆனால், அச்சம்பவம் பெண் சிசு கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (ஜனவரி 28) கூறியதாவது:
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில், பிறந்த ஆறே நாளான பெண் குழந்தை இறந்துவிட்டது. ஆனால், அது பெண் சிசுக் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
நலகொண்டா மாவட்டம் சந்தம்பேட் மண்டலில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் மாதவத் சாரதா மற்றும் மங்கத்தா தமபதிக்கு சமீபத்தில் சுமார் 3 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த குழந்தைக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள தேவரகொண்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அக்குழந்தைக்கு வைட்டமின் மற்றும் க்ளுகோஸ் கொடுத்து சிகிச்சை அளித்தனர். வீடு திரும்பிய குழந்தை ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டது.
குழந்தையின் பெற்றோரும் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் குழந்தையின் உடலை கிராமத்துக்கு வெளியே புதைத்து விட்டனர். இச்செய்தியை அறிந்த கிராமத்து மக்கள் உடனே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வருகிறோம். இறந்த குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் விசாரித்து வருகிறோம்” என்றார்.
காவல்துறை அதிகாரி கூறுகையில், “இக்குழந்தை உடல் நலக் குறைவால் இறந்துவிட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.