January 31, 2017
தண்டோரா குழு
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
பவானி ஆற்றில் நீரை தேக்கி வைக்க, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுனர் மதிப்பீட்டு குழுவிடம் கேரள அரசு மனு தாக்கல் செய்தது.
அதன்படி பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்டுவதற்கு கேரள அரசுக்குஅனுமதி அளித்தது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இந்தவிவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது.
இதை அடுத்து ” கேரள அரசு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது, அணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்னும் இரண்டு நாட்களில் வழக்கு தொடரப்படும்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.