February 1, 2017
தண்டோரா குழு
விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வங்கிக்கணக்கில் விரைவில் செலுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்தாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் ஜனவரி 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வரப்பட்ட சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டது.
புதன்கிழமை (பிப்ரவரி 1) கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தனி அதிகாரிகளின் பணிகாலம் ஜூன் 30 -ம் தேதி வரை நீட்டிப்புக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன் பின், மத்திய அரசாங்கம் கொண்டு வந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் தடை விதித்து ,மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர பழைய முறையையே பின்பற்றப்படும் என தமிழக அரசாங்கத்தால் கொண்டு வந்த சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து பருவமழை பொய்த்த காரணத்தினால் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக விரைவில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.