February 7, 2017
தண்டோரா குழு
உத்தராகண்ட், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
உத்தரா கண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியை மையமாகக் கொண்டு திங்கட்கிழமை இரவு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வின் தாக்கம் தலைநகர் தில்லி, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உணரப்பட்டது.
நில அதிர்வின் காரணமாக பதற்றமடைந்த மக்கள் கடும் இரவு முழுதும் வீதிகள், தெருக்கள் மற்றும் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களை உத்தரா கண்ட் மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது. இந்த நில அதிவினால் உயிர் மற்றும் பொருட்சேதம் எதும் ஏற்படவில்லை என உத்தரா கண்ட் மாநில காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலஅதிர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் “பிரதமர் அலுவலகம் உத்தரா கண்ட் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. அனைவரின் பாதுகாப்பு மற்று நலம் குறித்து நான் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.