March 15, 2017
தண்டோரா குழு
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் மற்றும் அ.தி.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார்கள் என அக்கட்சிகளின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.
அவரது மரணத்திற்குப் பிறகு காலியாக இருந்து வந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளன. இதன் காரணமாக ஆர்.கே. நகர் தொகுதியில் பலமுனை போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஆர்.கே. நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.