March 21, 2017
தண்டோரா குழு
சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானத்தின் மீது, வரும் 23-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது கடந்த மாதம் 18-ம் தேதி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முறையை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,ஒ.பன்னீர்செல்வம் அணியினர்,காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதனை ஏற்காத சபாநாயகர் தனபால், எண்ணிக் கணக்கெடுப்பு முறையில் வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனை அடுத்து சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக கூறி தி.மு.க. குற்றம்சாட்டியது. மேலும் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அவரை நீக்க கோரும் கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்தார்.
இதனை அடுத்து வரும் 23-ம் தேதி, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த தீர்மானம் விவாதத்துக்கு வரும்போது சபாநாயகர் தனபால், சபையை நடத்த மாட்டார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்துவார். அதன் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும்.
இந்த வாக்கெடுப்பில் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பாதிக்கு மேல் வாக்குபெறாவிட்டால் சபாநாயகர் தனபால் தனது பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.