March 25, 2017
தண்டோரா குழு
ராஜபக்சேவிடம் பரிசு வாங்கியவர்களின் அழுத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செவி சாய்க்கக்கூடாது என ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் ஞானம் அறக்கட்டளை சார்பில் ரூ.22 கோடி செலவில் இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் 150 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 9ம் தேதி இலங்கை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருந்தார்.
இதையடுத்து,திருமாவளவன் , வை.கோ, வேல்முருகன் ஆகியோர் ரஜினி இலங்கை செல்லக் கூடாது என அவரை வலியுறுத்தினர். இதையடுத்து அவரகளது கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினி தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில்,ராஜபக்சேவிடம் பரிசு வாங்கியவர்களின் அழுத்தத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செவி சாய்க்கக்கூடாதுஎன பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.