March 27, 2017
தண்டோரா குழு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை விசாரணையை தள்ளிவைக்ககோரிய டி.டி.வி.தினகரனின் மனுவை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
1996-ம் ஆண்டு, ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் ஏழு வழக்குகள் பதிவுசெய்தனர்.இதில் இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இது தொடர்பான வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனிடையே சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு மீதான பரிசீலனை உள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சனிக்கிழமை மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு விலக்களித்தது.
இந்நிலையில், தேர்தல் முடியும் வரை வழக்கை ஒத்திவைக்கக் கோரி தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்த போது டி.டி.வி. தினகரனின் மனுவை நீதிபதி மலர்மதி தள்ளுபடி செய்தார். மேலும் “இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும். டி.டி.வி. தினகரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.