May 20, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் முழுவதும் சீர்கெட்டுக் கிடக்கிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் புகார் கூறியுள்ளார்.
சிவகங்கை கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தை பார்வையிட வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“தமிழகத்தில்தான் ஒரே ஓட்டுக்கு மூன்று முதல்வர்கள் கிடைத்துள்ளனர். ஜெயலலிதா மறைந்துவிட்டார். அப்புறம் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார்.
இந்தியாவில் வேறு எங்காவது இப்படி ஒரு நிலையை நீங்கள் பார்த்துள்ளீர்களா.தமிழகத்தில் மட்டும்தான் இப்படி. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் முழுவதும் சீர்கெட்டுக் கிடக்கிறது.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அக்கறை செலுத்தவில்லை.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு யார் வந்தாலும் மக்கள் ஏற்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற வாய்ப்பே இல்லை.”
இவ்வாறு அவர் கூறினார்.