May 20, 2016
தண்டோரா குழு
ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது. அதையடுத்து அந்த நிறுவனத்திற்கு அளவிற்கு அதிகமான நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் அமர வைத்தார்கள் நிறுவன அதிகாரிகள்.
பின்னர் அனைவரிடமும் வினாத்தாளும், விடைத்தாளும் வழங்கப்பட்டது.
பின்னர் பேசிய அந்த நிறுவன மேலாளர், இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.
உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.
அதற்குள் அதில் உள்ள வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படுவார்கள் என அறிவித்தார்.
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாகப் பதில் எழுதினர்.
நேரம் முடிந்த பின்.
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும், நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.
அதில் இருவர் மட்டும் எந்தப் பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த மேலாளர், விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்குச் செல்லலாம் என அறிவித்தார்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒருசேர அந்த நிறுவன மேலாளரிடம், வினாக்களுக்குச் சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலைக் கொடுத்தீர்கள் எனக் கேட்டனர்.
அதற்கு அந்த மேலாளர் எல்லோரும் அந்தப் பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்,
அந்தப் பத்தாவது கேள்வி இது தான்.
மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.