May 25, 2016 தண்டோரா குழு
இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டு மோகம் என்பது எப்போதுமே இருக்கும் ஒன்றாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே சற்று குறைவாக உள்ளது. ஆனால் நாடு முழுவதும் இளைஞர்கள் முதல் மோதியவர்கள் வரை மட்டுமின்றி அரசியல்வாதிகளும் இந்த மேல்நாட்டுப் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். அதோடு தான் வருவதற்கு ஒரு கார், தன் குடும்பத்திற்கு ஒரு புதிய கார், எங்குச் சென்றாலும் அரசு பணம் என தாம் தூம் எனச் செலவு செய்யும் அரசியல்வாதிகள் மேலை நாட்டில் இருந்து ஒரு பழக்கத்தை கற்றுக்கொள்வார்களா என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. அந்தப் பழக்கம்,
இங்கிலாந்து நாட்டின் பிரதமந்திரி டேவிட் காமரூன் தனது மனைவி சமந்தாவின் தேவைக்காக, உபயோகப்படுத்தப்பட்ட நிசான் மைக்ரா காரை வாங்கிக் கொடுத்துள்ளார். இதை யாரும் நம்ப முடியாது தான் ஆனால் அது தான் உண்மை.
ஹாரிஸ் என்பவர் உபயோகப் படுத்தப்பட்ட கார்களை விற்கும் வியாபாரி. வெள்ளிக்கிழமையன்று பிரத மந்திரி அலுவலகத்திலிருந்து காவலர் ஒருவர் ஹாரிஸிடம், பிரதம மந்திரி தனது மனைவிக்குக் கார் வாங்கும் பொருட்டு கடைக்கு வரவிருக்கிறார், சிறிது நேரம் காத்திருக்கவும், என்று தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி தனது மனைவிக்கு உபயோகப்படுத்தப்பட்ட கார் வாங்குவார் என்பதை நம்ப முடியாத காரணத்தினால், இது தனது நண்பர்களின் விளையாட்டே என்று அசட்டையாக இருந்திருக்கிறார் ஹாரிஸ்.
சிறிது நேரத்தில் பிரதம மந்திரி தனது காவலருடன் கடைக்கு வந்து சாதாரண வாடிக்கையாளர் போல் காரைப் பார்வையிடத் தொடங்கியுள்ளார். நீலநிற நிசான் மைக்ரா காரைத் தேர்ந்தெடுத்து, அதன் முன்பக்க, பின்பக்க பிரேக் ஆகியவற்றைப் பரிசோதித்து அதற்குண்டான 1,495 பவுண்டு தொகையை மறுநாள் கொடுத்துவிட்டு வண்டியை பெற்றுச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார்.
பின்பு மறுநாள் சென்று தொகையைச் செலுத்தி, அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று காருக்குண்டான வரியையும் செலுத்திவிட்டு காரை எடுத்துச் சென்றுள்ளார்.
தான் பிரதமந்திரிக்கு கார் விற்பனை செய்ததில் பெருமை கொள்வதாகக் கூறிய ஹாரிஸ். மேலும் தான் எந்தத் தள்ளுபடியும் கொடுக்கவில்லை எனவும், காகிதத்தில் உள்ள தொகையே பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலை நாட்டிலிருந்து பல்வேறு விசயங்களைக் கற்றுக்கொள்ளும் நம் நாட்டு அரசியல்வாதிகள், மேலை நாட்டிலிருந்து இது போன்ற நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்வார்களா என்பதே எல்லோருடைய கேள்வியாகவும் உள்ளது.