May 30, 2016
தண்டோரா குழு
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தன்னிகரில்லா சாதனையைப் பாராட்டி ஜப்பானின் உயரிய விருதான ஃபுகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் கௌரவமிக்க உயரிய விருதாகக் கருதப்படுவது ஃபுகுவோகா விருது. ஆசிய கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிராண்ட், அகாடமிக், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய மூன்று பிரிவுகளில் 4 விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்தியா சார்பில் 1990-ம் ஆண்டு சித்தார் இசையமைப்பாளர் ரவி சங்கருக்கும் 1994-ம் ஆண்டு பரத நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியத்திற்கும், வரலாற்று ஆசிரியர் ரோமிலா -தாப்பருக்கு 1997-ம் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற ஆண்டு அகடாமிக் பிரிவில் இந்தியாவின் ராமச்சந்திர குஹாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், 2016-ம் ஆண்டிற்கான ஃபுகுவோகா விருது இசையமையாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு ஆசியாவின் பாரம்பரிய இசை, மேற்கு நாடுகளின் கிளாசிக் இசை மற்றும் அமெரிக்காவின் கிப்ஆப் இசை ஆகிவற்றை இணைத்து புதியதாக நல்ல இசை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக ஃபுகுவோகா ஆகிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வரலாற்றுப் பிரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அம்பேத் ஒக்கோம்போ மற்றும் கலை மற்றும் கலாச்சார பிரிவில் பாகிஸ்தான் யாஸ்மின் லாரி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ரவிசங்கர் சவுத்ரி, அஜ்மத் அலி கான், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன், வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா ஆகிய 9 பேருடன் தற்போது 10வதாக ஏ.ஆர்.ரஹ்மானும் ஃபுகுவோகா விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.