June 9, 2016
தண்டோரா குழு
பொதுவாக மக்களுக்கு உள்ள பிரச்சனைகளில் முக்கியமானது மின்சாரம் தான். அடிக்கடி நடக்கும் மின்வெட்டு, பின்னர் இரு மாதங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார கட்டணம் என பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் திண்டாடி வருகின்றனர். தற்போது இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்து உள்ளது. ஒரு மணி நேரம் பெடல் செய்தால் ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம் தான் அது.
இந்த இயந்திரம் மிதிவண்டியைப் போல் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபர் மனோஜ் பார்கவா என்பவர் இதைத் தயாரித்துள்ளார். இந்தச் சாதனத்தை அவர் டெல்லியில் அறிமுகப்படுத்தினார். இந்தச் சாதனத்தை பெடல் செய்யும் போது, அதில் உள்ள ஜெனரேட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தியாகி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.
அதோடு இந்தச் சாதனத்தை ஒருவர் மிதிக்கும் போது, அவரது உடலில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வகையிலும் இந்தச் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்தச் சாதனத்தின் விலை சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலில் உத்ரகாண்ட் மாநிலத்தில் இந்தச் சாதனம் விற்பனைக்கு வர உள்ளது. இந்தச் சாதனத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம், சிறிய விளக்குகள், மின்விசிறிகள் இயங்க முடியும். மேலும் செல்போனையும் சார்ஜர் செய்து கொள்ளலாம்.
இது குறித்து பர்கவா கூறுகையில், இந்த உலகம் முழுக்க சுமார் 130 கோடி மக்கள் மின்சாரம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் சாதனத்தை நான் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.