June 29, 2016
தண்டோரா குழு
முஸஃபர் நகரைச் சேர்ந்த ஜாட் இனத்தவர்கள், மாணவிகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதைத் தடை செய்ய ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.
ஜன்சத் ப்ளாக்ல் ரடௌர் கிராமத்தில் ஜாட் இனத்தவரின் பஞ்சாயத்து நடைபெற்றது. 30 கிராமத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கெடுத்தனர். மாணவிகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதைத் தடை செய்ய வேண்டும், அல்லது அவர்கள் போனில் பேசும் போது குடும்ப உறுப்பினர் எவராவது கண்காணிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.
கைப்பேசியின் உபயோகத்தால் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தவறாக உபயோகிப்பதைத் தடுப்பதே முக்கிய நோக்கமாகும். 12ம் வகுப்பு வரை பெண்கள் பெரும்பாலும் முதிர்ச்சி முற்றுப் பெறாதவர்களாகவே இருப்பர். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இத்தகைய தருணங்களில் தவறுகள் ஏற்படுவது சகஜம். பெண்கள் திசைமாறிப் போவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆகையால் பெற்றோர்கள் இவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். இத்தகைய காரணங்களினால் கைப்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடிவெடுக்கப்பட்டது என்று ஜாட் மஹாசபா தலைவர் நரேந்திர சிங்க் தெரிவித்தார்.
பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்குப் போன் அவசியமில்லை அதிலும் ஸ்மார்ட் போன் தேவையேயில்லை, அவர்களது கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இப்பஞ்சாயத்தின் நோக்கம் தடை செய்வதல்ல, தவறான உபயோகத்தைத் தடுப்பதேயாகும் என்றும் தெரிவித்தார்.
மாணவ மாணவிகளிடையே பல பிரச்சனைகளை இந்த கைப்பேசித் தொடர்புகள் உருவாக்குகின்றன. இரு பாலர்களும் பல தவறான முடிவுகளை எடுப்பதன் மூலம் சமூகத்திற்கும், கிராமத்திற்கும் அவமானத்தைத் தேடித் தருகின்றனர். அனுதினமும் இது போன்ற பல செய்திகளை நாம் செய்தித் தாள்களில் படிக்கிறோம் ஆகையால், கவனமாக இருக்கவேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.
மஹாசபாவின் மற்றொரு உறுப்பினரான சந்தோஷ் வர்மா, எல்லோரும் ஒருமனதாக இம்முடிவை வரவேற்பதாகக் கூறினார். தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் இன்றைய இளைய சமுதாயத்தினரைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறது. கைப்பேசியைத் தவறாக உபயோகிப்பதையே எதிர்க்கிறோம் என்று விளக்கமளித்துள்ளார்.
இது போன்று முன்பும் பஞ்சாயத்து கட்டுப்பாடு விதித்துள்ளது. இப்பஞ்சாயத்து 2011ம் ஆண்டு பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்குத் தடைவிதித்தது. 2015ம் ஆண்டு ஷஹரான்பூர் பஞ்சாயத்து ஜீன்ஸ், Tஷர்ட் அணிவதற்கும், கைப்பேசி உபயோகிப்பதற்கும் தடை விதித்தது.
முசஃபர் நகர் மாவட்ட நீதிபதி தினேஷ் குமார் சிங்க் இந்த விஷயம் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு ஜன்சத் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.