July 4, 2016
தண்டோரா குழு
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை பம்ப்லொனவில் நடைபெறப்போகும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தவிர்க்கும்படி இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்பெயினில் உள்ள பம்ப்லொனவில் இந்த மாத இறுதியில் சான் ஃபெர்மின் விழா நடைபெற உள்ளது. அதில் காளைகளின் வீர விளையாட்டும் இடம் பெறவுள்ளது.
சுவாரஸ்யமான இந்நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதையொட்டி இந்திய அரசின் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி ஜூன் 26ம் தேதி எழுதிய கடிதத்தை PETA மையம் வாஷிங்டனில் வெளியிட்டது.
இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 48 காளைகள் பங்கேற்கின்றன. அவை பயமுறுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயத்தம் செய்யப் படுகின்றன.
நிகழ்ச்சியின் போது சில சமயம் தவறுதலாகக் கீழே விழுவதனால் அவற்றுக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. அல்லது அவற்றின் பாதையில் பார்வையாளர்கள் குறுக்கிட்டால் அவர்களின் உயிருக்கே உலையாகி விடுகிறது என்றும் கூறியுள்ளார்.
இத்தகைய காரணங்களைக் கருத்தில் கொண்டு, விலங்களின் மேல் இரக்கங்கொண்டு, மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, செல்வாக்கை உபயோகித்து தடை செய்யவேண்டும் என்று ஒபாமாவை, தனது கடிதத்தில் மேனகாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்பெயினில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, மிருகங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதைப் பற்றி பேசுவதன் மூலம், உலகளாவிய இரக்கமனம் கொண்ட மக்களின் மனதில் ஒபாமா இடம் பிடிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய விளையாட்டுகள் இந்தியா, அர்ஜென்டைனா, கனடா, க்யூபா, டென்மார்க், இத்தாலி, யுனைடெட் கிங்டம், மற்றும் பல ஸ்பானிஷ் நகரங்களிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சுவாரசியமான நிகழ்ச்சியைக் காண ஒபாமா பம்ப்லொனவிற்கு செல்லப் போகிறாரா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜொஷ் ஈர்னெஸ்ட் பத்திகையாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.