July 4, 2016
தண்டோரா குழு
ஒரிசாவில் ஆண்டு தோறும் பூரி ஜகன்நாத் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் ஜூலை 6ம் தேதி நடைபெறப் போகும் விழாவில் பக்தர்கள் பலராமர், கிருஷ்ணர், சுபத்ரா ஆகியோரைத் தரிசித்த பிறகு கடற்கரையில் மண்ணாலான 100 ரதங்களைக் கண்டுகளிக்கும் வகையில் சுதர்சன் பட்னாயக் என்பவர் மண் ரதங்களை செதுக்கிப் புதுச்சாதனைப் படைக்கவுள்ளார்.
இதுவரையில் 50 ரதங்கள் முடிவடைந்து விட்டதாகவும், ரத யாத்திரைக்கு இரு தினங்களுக்கு முன்பு முழுவதும் பூர்த்தியாகி விடுமென்றும் கூறியுள்ளார். இவருக்குச் சமீபத்தில் மாஸ்கோ, புல்கரியா ஆகிய நாடுகள் தங்கப் பதக்கம் அளித்து இவரது சாதனையைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற முயற்சிப்பதாகவும், அப்பதிப்பின் ஆசிரியரின் ஒப்புதலோடும், அறிவுரையின் படியும் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ரதங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என்பதில் உறுதியாக உள்ளார். அதனால் இவற்றைப் பாதுகாக்க மிகப் பெரிய கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மண்ணாலான ரதங்கள் அமைக்கப்படுவதற்கு ஒரு சிறிய பின்னணி விளக்கப்படுகிறது. அதாவது பலராம் தாஸ் என்பவர் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ண பக்தர். சிறந்த புலவருங்கூட.
ஒருமுறை பிற பக்தர்கள் இறைவனது தேரை வடம் பிடிக்க பலராம்தாஷை அனுமதிக்க மறுத்தனர். பிறரால் இழிவு செய்யப்பட்டதால் மனம் வருந்திய தாஸ் கடற்கரை மணலில் அதே போல் ரதம் செய்துள்ளார்.
மற்றவர்கள் உண்மையான தேரை இழுக்க முயன்றனர். அழகான சாலையில் அந்தத் தேர் நகர மறுத்தது. ஆனால் அதே சமயம் தாஸால் செய்யப்பட்ட மண் தேர் கடற்கரையில் உருளத்தொடங்கியது. இதைக் கண்ட பிற பக்தர்களும், மன்னரும் தங்களது தவறை உணர்ந்து பலராம் தாஸிடம் மன்னிப்புக் கேட்டனர். அன்று முதல் இவ்வழக்கம் நீடித்து வருகிறது என்று பட்னாயக் தெரிவித்துள்ளார்.