July 11, 2016
தண்டோரா குழு
கோவை அருகே யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆடு மேய்க்கச் சென்ற மலைவாழ் பெண் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் ஆலந்துறை முல்லியன்காடு லால்பகதூர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி ராமாத்தாள் (37). இவர், தனது வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை மேய்ச்சலுக்காக நேற்று காலை அழைத்துச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஆடுகள் மட்டும் தானாக வீடு திரும்பியுள்ளது.
இதையடுத்து, அவரது கணவர் வெள்ளியங்கிரி ராமத்தாளை தேடிச் சென்றார். இதில், செம்மேடு கரும்புக்காடுபதி என்ற இடத்தில் சதாசிவம் என்பவர் நிலத்தில் யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் ராமாத்தாள் சிக்கி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்துள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில் ஆலாந்துறை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விவசாய நிலத்தின் உரிமையாளர் சதாசிவத்திடம் விசாரணை நடத்தி அவரை கைதுசெய்தனர்.