July 12, 2016
தண்டோரா குழு
இந்திய அளவில் இந்துக்களின் புனித இடமாகக் கருதப்படும் காசியில் சென்று இயற்கை எய்தினால் புண்ணியம் எனவும், நேராகச் சொர்கத்திற்கு செல்லலாம் எனவும் நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, அங்குள்ள கங்கைக் கரையில் சடலங்களை எரிப்பதோடு, அங்கேயே ஆற்றில் கரைத்தால் அவர்களது ஆன்மா சாந்தியடையும் என்பதும் ஒரு ஐதீகம். இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள் ஒன்றிற்கு சுமார் ஆயிரக்கணக்கான சடலங்கள் அங்கே கொடுவரப்பட்டு எரியூட்டப்படுகின்றன. அங்கு ஒரு சடலத்தை முழுமையாக எரித்து சாம்பலாக்க குறைந்தபட்சம் 200 முதல் 300 டன் மரம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் நாள் ஒன்றிற்கு சுமார் ஒரு வானத்தையே அளித்துக் கொண்டுவந்தாலும் அனைத்துச் சடலங்களையும் எரியூட்ட முடியாத நிலைதான்.
எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மரங்கள் வெட்டியெடுக்கப்பட்டு அதுவும் குறிப்பாக வேருடன் எடுக்கப்பட்டு அவை காசிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு வனப்பகுதிகள் அழிவை நோக்கிச் செய்வதாக கருத்து நிலவியது. அதையடுத்து கோவையைச் சேர்ந்த தன்னார்வத் அமைப்பான, தியான பொது சேவை மையம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்வது குறித்து யோசனை செய்யப்பட்டது.
இதில் 7 மாதங்களுக்கு முன் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவன விடுதிகள், வீடுகள் ஆகியவற்றில் வரும் தேங்காய் தொட்டிகளைச் சேகரித்து பொடியாக்கி அவற்றைக் காசிக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து தங்களால் முடிந்த அளவு தேங்காய் தொட்டிகளை சேகரித்துக் கொடுத்தனர்.
இதனால் சுமார் 150 டன் அளவிற்குத் தேங்காய் தொட்டிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றைப் பொள்ளாச்சியில் உள்ள மில்லில் துகள்களாக்கி, காசிக்குக் கொண்டு செல்லும் வைபவம் நேற்று நடத்தப்பட்டது. இந்தத் தேங்காய் தொட்டி சில்லிகளை ஏற்றிய லாரிகளை கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தியான பொது சேவை மையத்தின் நிறுவனர் என்.நித்தியானந்தம், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் கவிஞர் கவிதாசன், ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், பி.எஸ்.ஜி.சர்வஜன மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் என்.சி.நந்தகோபாலன் மற்றும் பள்ளி மாணவர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர்.