February 2, 2018
tamilsamayam.com
இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில், 48 கி.கி.எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
டெல்லியில், இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டித் தொடர் நடந்தது. இதில், 48 கிகி எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம், பிலிப்பைன்சின் ஜோசி கபுகோவை எதிர்கொண்டார். ஏற்கனவே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து, பெண்களுக்கான 68 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி, பின்லாந்தின் மிரா பட்கெனானிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் பிவிலோ பாசுமடாரி (64 கிகி), லவ்லினா (69 கிகி), மணிஷா (54 கிகி), பிங்க் ஜங்க்ரா (51 கிகி) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 91 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத், உஸ்பெகிஸ்தானின் சஞ்சர் டர்சுனோவை எதிர்கொண்டார். இறுதியில், சஞ்ஜீத், 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதே போன்று மற்ற எடைப்பிரிவு போட்டிகளில், தினேஷ் திகார் (69 கிகி), சதீஷ் குமார் (91 கிகி), மணீஷ் கவுஷிக் (60 கிகி) ஆகியோர் தங்கப்பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.