July 22, 2016
தண்டோரா குழு
சேலத்தில் 2 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல். மர்நபர்களுக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்து மீண்டுவந்ததாகக் காவல்துறையில் புகார்.
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் 5 ரோடு பகுதியில் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி ராஜ்குமார், அவரது கார் ஓட்டுநர் சுரேஷ் மற்றும் கடையில் வேலை செய்யும் 2 பேரை 10க்கும் மேற்பட்ட மர்மநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
வழியில் கண்களை திறக்கக்கூடாது என்று கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டியுள்ளனர்.
பின்னர் ஒரு நாள் முழுவதும் அடித்துத் துன்புறுத்திய நிலையில் அவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் ராஜ்குமார் தனது நண்பர்கள் மூலம் முதலில் 10 லட்சம் பின்னர் 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 18ம் தேதி நள்ளிரவு சேலம் பெங்களூர் சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் கண்களைக் கட்டிவிட்டு 4 பேரையும் இறக்கிவிட்டு அந்தக் கும்பல் சென்றுவிட்டது.
உடலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்குமார் இன்று காலை சேலம் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங்கை நேரில் சந்தித்து நடந்ததைப் புகார் மூலம் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்கள் யார். எதற்காகக் கடத்தினர் என்பது குறித்து மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.