March 7, 2018
tamilsamayam.com
தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி, 3–2 என வெற்றி பெற்றது.
தென் கொரியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி இன்று நடந்தது.
போட்டியின் 6வது நிமிடத்தில், பூணம் ராணி முதல் கோல் அடித்தார். இதற்கு 10வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் தென் கொரியாவின் யுரிம் லீ கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
இதற்கு 27 வது நிமிடம் கேப்டன் ராணி ராம்பால் கோல் அடித்து பதிலடி கொடுக்க, முதல் பாதியின் முடிவில் இந்திய அணி, 2–1 என முன்னிலை பெற்றது.
பின் பரபரப்பாக துவங்கிய இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்தில், தென் கொரியாவின் சியோ ஒரு கோல் அடிக்க, போட்டி 2–2 சமம் ஆனது. பின் 32வது நிமிடத்தில் குர்ஜீத் கவுர் கோல் அடிக்க, இந்தியா அணி முன்னிலை பெற்றது.
இதன் பின் கடைசி வரை இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை. முடிவில், இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தவிர, தொடரில் 2–0 என, முன்னிலையில் உள்ளது.