April 14, 2018
tamilsamayam.com
குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் 2018 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில், மேரி கோம் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்று தந்துள்ளார். முன்னதாக நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்காட்லாந்தின் மேகன் கோர்டனை, இந்தியாவின் மேரி கோம் வெற்றி கண்டார்.
இதையடுத்து நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியுடன் மோதி, சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஓ ஹாரா உடன் மேரி கோம் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மேரி கோம், 5 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை வெற்றி மூலம், இந்தியாவிற்கு 18வது தங்கப் பதக்கத்தை மேரி கோம் பெற்றுத் தந்துள்ளார். இது கடந்த 5 மாதங்களில் அவர் பெறும் 3வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உலக சாம்பியன், ஒலிம்பிக் வெண்கலம் உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்று, மேரி கோம் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.