April 26, 2018
தண்டோரா குழு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால்,பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,பெங்களூரு இடையேயான ஐ.பி.எல்.போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.இதனைத்தொடா்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரா் குயின்டன் டீ காக் மற்றும் டிவில்லியா்ஸ் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவா் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரா் வாட்சன் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டே சென்றன.ஆனால் மறு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு 8 சிக்சா்கள் உட்பட 82 ரன்கள் குவித்தார்.தொடா்ந்து அதிரடி காட்டிய கேப்டன் தோனி 7 சிக்சா்கள் உட்பட 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.இறுதியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில்,இந்த போட்டியின் போது,பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி,பந்து வீச்சாளர்களிடம் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.இதன் காரணமாக,பெங்களூர் அணி பந்துவீச்சின்போது,அதிக நேரம் எடுத்துக்கொண்டது.இது ஐபிஎல் விதிகளை மீறும் செயல் என்பதால் கேப்டன் விராத் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.