June 19, 2018
tamilsamayam.com
உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பங்கேற்க சவுதி அரேபிய வீரர்கள் ராஸ்டோவ்-ஆன்-டான் சென்ற விமானத்தில் திடீரென தீப்படித்தது.
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான 21வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது.32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.
இதன் ஃபைனல் போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது.இந்நிலையில் உருகுவே அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் (நாளை) பங்கேற்க சவுதி அரேபிய வீரர்கள் மாஸ்கோவில் இருந்து ராஸ்டோவ்-ஆன்-டானுக்கு விமானம் மூலம் கிளம்பினர்.
இந்நிலையில் அவர்கள் கிளம்பிய விமானத்தின் வலது பக்க இறக்கையில் உள்ள எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது.இதை உடனடியாக விமான பணியாளர்கள் கவனித்து எச்சரிக்க,விமானம் சரியான நேரத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து சவுதி அரேபிய அணி வீரர்கள் சிறு கோளாறுக்கு பின் பத்திரமாக ராஸ்டோவ்-ஆன்-டானுக்கு வந்தடைந்ததாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக தவகல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் முதல் லீக் போட்டியில் ரஷ்யாவிடம் 0-5 என தோல்வியடைந்த சவுதி அணி,உருகுவே அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் முன்னதாக இந்த இரு அணிகள் கடந்த 2002ல் பங்கேற்ற நட்பு கால்பந்து போட்டியில் சவுதி அணி வென்றது.தொடர்ந்து 2014ல் பங்கேற்ற நட்பு கால்பந்து போட்டி ‘டிரா’ ஆனது. ஆனால், தரவரிசையில் பின் தங்கியுள்ள சவுதி அணியை (67வது இடம்) உருகுவே அணி எளிதாக வெல்லும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.