• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு

August 12, 2016 தண்டோரா குழு

பெண் ஊழியர்களுக்குப் பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதற்கான பேறுகால சலுகைகள் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்துத் தயாரிக்கப்பட்ட இந்த மசோதாவைத் தொழிலாளர் நல அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்தார்.

இதன் மீது நடந்த விவாதத்தில் அமைச்சர் தத்தாத்ரேயா பதில் அளிக்கும்போது, ‘உலகில் அதிக வாரங்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கும் நாடுகளில் கனடா (50 வாரம்) முதலிடத்திலும் நார்வே (44 வாரம்) இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்த மசோதா சட்டமானால் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கம்’ என்று கூறினார்.

மேலும், இந்த மசோதாவைக் குறித்து அமைச்சர் மேனகா காந்தி பேசும்போது, ‘பேறுகால விடுமுறையை எனது அமைச்சகம் 8 மாதங்களாக உயர்த்தப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இது மிகவும் அதிகம் என்று தொழில் நிறுவனங்கள் கருதியதால் தற்போது 26 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் 15 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் 10 பேர் பெண் உறுப்பினர்கள் என்பது சாதனை அளவாகும். விவாதத்தில் ஜெயா பச்சன், விஜிலா சத்யானந்த், அசோக் சித்தார்த் போன்ற எம்.பி.க்கள் பேசும்போது, ‘பெண் ஊழியர்களுக்குப் பேறுகால விடுமுறையை 1 ஆண்டாக அதிகரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

மேலும், சில எம்.பி.க்கள், ‘ஆண் ஊழியர்களுக்கும் மனைவியின் பேறு காலத்தின்போது விடுமுறை அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தை வளர்க்கும் பொறுப்பை பெற்றோர் பகிர்ந்துகொள்ள முடியும்’ என்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திரா பேசும்போது, ‘வாடகைத் தாய் மூலமும், தத்து எடுப்பதன் மூலமும் குழந்தை பாக்கியம் பெறும் பெண் ஊழியர்களும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், வாடகைத் தாய்க்கான சலுகைகள் பற்றி இந்த மசோதா எதுவும் குறிப்பிடவில்லை’ என்றார். இதற்குக் கனிமொழி, டெரக் ஓ பிரையன் ஆகிய உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இதைக்குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் தத்தாத்ரேயா உறுதி கூறினார். இதையடுத்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேறியது. இனி இந்த மசோதா மக்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயருகிறது. இந்தச் சலுகை பிறந்து உயிருடன் இருக்கும் 2 குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், 2க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பேறுகால விடுமுறை 12 வாரங்களாக இருக்கும்.

வாடகைத் தாய் மூலமும், தத்து எடுப்பதன் மூலமும் குழந்தை பாக்கியம் பெறும் பெண் ஊழியர்களுக்கு 12 வாரப் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்.

நிறுவனங்கள் உரிய வசதிகள் செய்துகொடுத்தால் பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.சுமார் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் குழந்தை காப்பகங்கள் கட்டாயம் ஆகிறது.

இந்த சட்டத்திருத்தம் மூலம் அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பயன் பெறுவார்கள். மேலும் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த புதிய சட்டம் பொருந்தும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டது.

மேலும் படிக்க