August 17, 2018
தண்டோரா குழு
டெல்லி ஸ்மிரிதி ஸ்தல் பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பா.ஜ.,தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு பா.ஜ.க, தலைவர் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2 மணியளவில் துவங்கியது.இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி நடந்து சென்று பங்கேற்றார்.மேலும் பா.ஜ.க,தலைவர் அமித்ஷா,அத்வானி,மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.,தொண்டர்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.பின்னர்,வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்காட் அருகே உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,பாஜக தலைவர் அமித்ஷா,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,சோனியா காந்தி,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்கு நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் சார்பில் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதைபோல் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய்,தம்பிதுரை,ராகுல்காந்தி,டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.மேலும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்,மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முப்படை வீரர்கள் வாஜ்பாய் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.இதையடுத்து,இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா தீ மூட்டினார்.