September 5, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் அறிமுகமானார்.அதன்பின் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து ஒருநாள்,டி20,டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார். 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இவரது சிறந்த பந்து வீச்சு இந்திய அணிக்கு வெற்றியை தந்தது.
மொத்தம் 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.பி.சிங் 69 விக்கெட்டுகளும்,14 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார். இந்நிலையில்,அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆர்.பி.சிங் அறிவித்துள்ளார்.மேலும், தன்னுடைய கிரிக்கெட் பயணம் இனிமையானதாகவும் மறக்க முடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.