September 26, 2018
தண்டோரா குழு
மொத்தம் ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க வேண்டியிருக்கும் அமைச்சருக்கு துணிச்சல் உண்டா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக சார்பில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைகண்ணு,ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான்.லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர்.இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.இந்த ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும்,நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் சிலர் பேசி வருகிறார்கள்.தமிழக அரசு வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது.தமிழகத்தில் எடப்பாடி,ஓ.பி.எஸ்.,தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை,கட்சியை எவராலும் அசைக்க முடியாது.இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என பேசினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அதிமுக ஆட்சியை லஞ்ச ஆட்சி என தவறாக பேசுபவர்களின் நாக்கை அறுத்து விடுவேன்:அமைச்சர் துரைக்கண்ணு – ஊழல் செய்தவர்களுக்கு ஓட்டுப் போட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் விளைவு தான் இது.அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது போன்றது தான் இதுவும்.மொத்தம் ஏழரை கோடி பேரின் நாக்குகளை அறுக்க வேண்டியிருக்கும்.அந்த அளவுக்கு தெம்பும்,துணிச்சலும் ஊழல் அமைச்சருக்கு உண்டா?” என பதிவிட்டுள்ளார்.