August 30, 2016
தண்டோரா குழு
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இன்று விஜயவாடாவில் திடீர் என உடல் நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி (81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென மயக்கம் அடைந்தார்.இதையடுத்து அங்கிருந்த மட உதவியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறும்போது,ஜெயேந்திரருக்கு ரத்தம் அழுத்தம் மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது.
இதற்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை.சிடி ஸ்கேன் போன்றவையும் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.மாலை வரை அவர் ஐசியுவில் கண்காணிக்கப்படுவார் பின்னர் அவரது உடல் நலம் தேறியதும் வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.