October 26, 2018
தண்டோரா குழு
டிடிவி தினகரன் நடத்துகின்ற கட்சி விரைவில் கானல் நீராகிவிடும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.கோவையில் பன்னாட்டு ஜவுளிக்கண்காட்சி முன்னோட்ட விழா இன்று நடைபெற்றது.இதில் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்று லோகோ,கையேடு,இணையம் ஆகியவற்றை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இந்த கண்காட்சியில் 600க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும்,வெளிநாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் இதில் பங்கேற்பார்கள்.தமிழகத்தில் வெகுவிரைவில் ஜவுளிக்கொள்கை வெளியிடப்படும் என தெரிவித்த அவர்,கழிவுபஞ்சுக்கான வரி விதிப்பை ரத்து செய்வது குறித்து பரீசிலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
விசைத்தறி தொழில் நலிந்துவிடவில்லை.விசைத்தறி கூடங்கள் மூடுவதற்கான காரணங்கள் வேறாக இருக்கும்.ஜவுளித்தொழிலில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்கின்றது.கைத்தறி தொழில் காலம் காலமாக இருந்து வருகின்றது எனவும்,அந்த கைத்தறியை காப்பாற்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்த வரை ஜவுளித்தொழிலில் 40 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகின்றது.தமிழ்நாட்டில் 1136 கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கைத்தறி தொழில் நடைபெற்று வருகின்றது.ஜவுளிக்கண்காட்சியில் குறைந்த கட்டணத்தில் அரங்குகள் வழங்கப்படும்.
டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்வேன் என்று சொன்னால் தான் அவருடன் யாராவது இருப்பார்கள்.இல்லையெனில் அவருக்கு நாதி இல்லாமல் போய்விடும்.தினகரன் நடத்துகின்ற கட்சி விரைவில் கானல் நீராகிவிடும்.தங்க தமிழ்செல்வன் நீதிமன்றத்தை விமர்சித்து மீண்டும் வழக்கு பாயும் சூழலை ஏற்படுத்தியுள்ளார்.”இவ்வாறு பேசினார்.