November 7, 2018
தண்டோரா குழு
இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி வந்தார்கள்.
அப்போது அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.அப்போது, குரூப் டான்ஸரான சரவணன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்தது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அஜித்துக்கு தகவல் தெரியவர உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். சரவணன் உயிரிழந்தது தெரிந்தவுடன் பிரேதப் பரிசோதனை முடியும் வரை மருத்துவமனையிலே இருந்திருக்கிறார் அஜித். மேலும், குடும்பத்தினரிடமும் பேசி உடலை புனேவிலிருந்து மும்பைக்கு அனுப்பி, அங்கிருந்து சென்னைக்கு கொண்டு செல்லும் வரை முழுக்க தொலைபேசி வாயிலாக எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். அருகில் இருந்த டான்ஸர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரவணனின் உடலை சென்னைக்கு எடுத்து வருவதற்கான எல்லாச் செலவுகளையும் அஜித்தே ஏற்றுக்கொண்டார்.
அதைபோல் சரவணனின் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கில் அஜித் கலந்துகொண்டு சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய நடிகர் இந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கிறாரே என்று குரூப் டான்ஸர்கள் மிகவும் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.