November 23, 2018
தண்டோரா குழு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இரண்டாது ஆட்டம் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் கைவிடப்பட்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் ஷார்ட் 14 ரன்களும், லின் 13 ரன்கள், ஸ்டாய்னிஸ் 4, மேக்ஸ்வேல் 19 என ஆட்டமிழந்த நிலையில், மெக்டெர்மாட் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதேசமயம் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 19 ஓவர் முடிந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிடலாம், மேலும் நேரம் கருதி 20 ஓவர் போட்டியை டிஎல்எஸ் முறைப்படி19 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 137 ரன்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 19 ஓவர்களில் 138 ரன்கள் வெற்றி இலக்காக தரப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் டிஎல்எஸ் முறைப்படி மூன்றாவது முறையாக 5 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 5 ஓவர்களில் 46 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து மழை வந்ததால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இரண்டாது ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.