September 19, 2016
தண்டோரா குழு
காவேரி விவகாரம் கட்டுக் கடங்காமல் போய்க்கொண்டிருந்த தருணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த KPN உரிமையாளரின் 42 பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
செப்டம்பர் 12ம் தேதி நடந்த இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று பாக்யா என்ற இளம்பெண் உட்பட போலீஸார் 10 பேரைக் கைது செய்தனர்.இந்த ஆர்பாட்டக்காரர்கள் KPN பஸ் ஓட்டுனரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிடுவதாக மிரட்டிய காட்சி, பேருந்து நிலையத்தில் வைக்கபட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியிருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், பாக்யா ஈடுபட்டிருந்ததைக் கண்டதால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
தினக்கூலி வேலை செய்து தனது பெற்றோருடன் கிரிநகர் பகுதியில் வசித்து வருபவர் பாக்யா. சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பும்போது அவரது நண்பர்கள் சிலர் அவரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர். அதற்குக் கூலியாக ஒரு தட்டு பிரியாணியும், 100ரூபாயும் தருவதாக கூறியுள்ளனர். இதையெடுத்து பாக்யா பஸ்களுக்குத் தீமூட்டியுள்ளார்.பின்னர் இத்தகவலை அவரது தாயார் எல்லம்மாவே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
400 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் அதில் இவர் மட்டுமே பெண் ஆவார். புகைப்படத்தில் இருந்த மற்றொரு பெண்ணைத் தெளிவாகத் தெரியாத காரணத்தினால் காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், பாக்யா ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினாரா என்பது இன்னும் தெளிவுபடவில்லை என்றும், விசாரணையில் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை உணவிற்காகத் தன் வாழ்க்கையை அழித்துக் கொள்ள முனைவதும்,மக்களின் பல கோடிக் கணக்கான சொத்துக்களை அழிப்பதும் சோற்றுக்காக வாக்கை விற்பதும் மக்களின் வறுமைக்காட்டுகிறதா ? அல்லது அறியாமைக் காட்டுகிறதா?