November 30, 2016
தண்டோரா குழு
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலால் டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அப்படி வரும் போது நவம்பர் 30 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று செவ்வாய்க்கிழமை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
“அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும். புயலுக்கு நாடா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
நாடா புயல் கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும். புதுச்சேரிக்கு அருகே தென்கிழக்கே வங்கக் கடலில் 730 கி.மீ அருகே புயல் மையம் கொண்டுள்ளது.
இதன் விளைவாக, டிசம்பர் 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.