December 10, 2016
தண்டோரா குழு
கேரள மாநிலத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் 2 புதிய செயலிகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிமுகம் செய்து வைத்தார்.
திருவனந்தபுரத்தில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் அரைஸிங் கேரளா’ (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்று பெயரிடப்பட்டுள்ள செயலிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் பினராயி விஜயன் பேசியதாவது:
“ஊழலற்ற மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே மாநில அரசின் நோக்கம். அதைக் கருத்தில் கொண்டு, அரசு நிர்வாகம், அமைப்புகளில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் லஞ்சம், ஊழல் தொடர்பான சம்பவங்களை விடியோ, ஆடியோ மூலம் பதிவேற்றம் செய்ய முடியும். ஊழலை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைகளை கேரள மக்கள் இந்த செயலிகள் மூலம் வழங்கலாம்”.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.