November 7, 2018
தண்டோரா குழு
துப்பாக்கி,கத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் நேற்று வெளியானது.
சர்கார் படம் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.கேரளாவில் மட்டும் சர்கார் 400 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் 650 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் 190 தியேட்டர்களிலும்,50 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மொத்தம் 350 தியேட்டர்களில் சர்கார் வெளியாகி உள்ளது.
முதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தான் என்று அறிவித்தாலும்,பல்வேறு திரையரங்குகளில் காலையிலேயே திரையிடப்பட்டன.முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன.இதனால் முதல் நாள் வசூல் சாதனை புரியும் என்று கூறப்பட்டது.
அதற்கு ஏற்ப இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே முதல் நாளில் செய்யாத வசூல் சாதனையை சர்கார் படைத்துள்ளது.முதல் நாள் மொத்த வசூலில் சுமார் 30 கோடியை கடந்திருக்கிறது ‘சர்கார்’.இதனால் சன்பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும்,சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை சாதனை புரிந்திருக்கிறது.முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்த முதல் படம் ‘சர்கார்’ என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பாக முதல் நாளில் ‘காலா’ வசூலித்த 1.76 கோடியே சாதனையாக கருதப்பட்டது.
மேலும்,தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள்,வெளிநாடுகள் என பல சாதனைகளை முறியடித்து வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்.